Friday 16 December 2011

இது கவிதை அல்ல !...


இலக்கியத்தில் உனக்குப்
பிடித்தது கவிதை என்பதால்

இரவெல்லாம் உறங்காமல்
நான் யோசித்து யோசித்து
கிறுக்கிய கிறுக்கல்களே தவிர
இது கவிதையல்ல !

காளிதேவியின் அருளால்
கவிபாடியக் காளமேகப்
புலவனைப் போல் உன்
கடைக்கண் பார்வைப்
பட்டதும் நான் பிதற்றிய
பிதற்றல்களே தவிர
இது கவிதையல்ல !

படிக்காமல் தேர்வு எழுதிய
ஒரு பள்ளிச்சிறுவன் போல்
பயந்துகொண்டே உன்னிடம்
சமர்ப்பிக்கிறேன் ..

நீ பிடிக்கவில்லை என்று
பிழை திருத்தம் செய்யவோ,
நன்று! என நலம் பாராட்டவோ
இது ஒன்றும் கவிதையல்ல !

உன் மீது எனக்கிருக்கும்
உணர்வைச் சொல்ல என்
தூக்கத்தைத் தொலைத்து
எழுதியத் தூது சருக்கம் ! ...

Tuesday 6 December 2011

குல சாமி

என்ன தவம் செய்தேனோ !
உன் மகனா நான் பிறக்க
என்ன பாவம் செய்தாயோ
என்னை நீ ஈன்றெடுக்க …

என்னை நீ கரை சேர்க்க
எத்தனையோ பாடுபட்டும்
என்னதான் சுகத்தக் கண்டே
என்னப்பெத்த ஆத்தாவே ? ! …

கருவரையில் குடியிருக்கும்
கருமாரி சாமிகூட
காரியத்தை நிறைவேத்த
காசு பணம் கேட்கையில
கருச் சுமந்தக் கூலியின்னு
நீ ஒன்னும் கேட்கலையே !

ஒரு பயனும் இல்லையின்னு -நீ
உள்ளூற அறிஞ்சிருந்தும்
உன் உதிரத்தைப் பாலாக்கி
உணவாகத் தந்தாயே !
இதுபோல ஒரு மனசு
யாராத்தா உனக்குத் தந்தா?

உன்னைப் பத்தி ஒரு வார்த்தை
உண்மையாகச் சொல்லப் போனா
கோயிலில கொழுவிருக்கும்
சாமியெல்லாம் சாமியல்ல !
உண்மையான சாமி நீதான்
உயிர்காக்கும் குலசாமி …

இது மலர் பேசும்…மௌன மொழி…


உன் வீட்டுத் தோட்டத்தில் 
உனக்காகப் பூத்திருந்தேன்
என்னை ஏன் 
பொசுக்கென்று பறித்து
பூஜை அறையில்
வைத்துவிட்டாய் ?
                                                           .
அன்பே !,நான்
எத்தனை ஜென்மம் எடுத்தாலும்
என்னை இறைவனடி சேர்த்து
விடுகின்றாயே !

இதற்காகவா
இன்னொரு பிறவி எடுத்து
உன் வீட்டுத் தோட்டத்தின்
முற்றத்தில் பூத்திருந்தேன் ?

உன் கார் கூந்தலைச் 
சேர்வதற்கே
காத்திருந்த என்னை
மீண்டும் கடவுளின்
காலடியில் சமர்ப்பித்து
விட்டாயே !..

கதறுகிறேன் நான் !
கண்களை மூடிக்கொண்டு
தியானிக்கின்றாய் நீ !

பூஜை அறையில் நீ வணங்குவது
இறைவனை அல்ல ! – என்
பூத உடலுக்கு இறுதியஞ்சலி
செலுத்துகின்றாய் !..
 
என்னுயிர் ஊசலாடிக்
கொண்டிருக்கிறது...
நான் கருகிப் போவதற்குள்
உன் கார் கூந்தலில்
என்னைச் சூடிக்கொள் !
எனக்கு மோட்சம் கொடு! …

Saturday 3 December 2011

பாரத மாதா !

பட்டினிச் சாவுகள்
நிகழ்கையிலும் பால் குடிக்கும்
‘கடவுள் சிலைகள்’ 
ஆபுத்திரரின் அமுத சுரபிகளில்
அள்ள அள்ளக் குறையாமல்
‘கண்ணீர்த் துளிகள்’…  

சமதர்மம் பேசிவிட்டு
ஜனநாயகப் புறாவை
சற்று தூக்கலாக நெய் விட்டு
வறுத்து தின்னும் 
‘மங்குனி அரசர்கள்’ 

சங்கம் என்ற சொல்லே
தமிழ்ச்சொல் இல்லை எனத்
தெரிந்தும் சங்கத் தமிழே ! 
என்று அழைப்பதைப் போல்
பெயருக்குப் பின்னால் … ர் … ர்
என்று அழைக்கப்படும்
‘ஜாதிப் பெயர்கள்’  

காக்கிச் சட்டையில் 
வழிப்பறிக் கொள்ளையர்கள்,
கட்டண வழியில் சென்று
சிறப்பு தரிசனம் செய்தாலும்
கண்டுகொள்ளாத 
‘கடவுளர்கள்’ …   

இவை எல்லாவற்றையும்
பார்த்து உள்ளுக்குள் அழும்
ஒரு ஊமச்சிதான் எங்கள்
“பாரத மாதா”